அசாம் தேர்தல் களம்: தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 60 இடங்களை வென்று தனது பலத்தை நிரூபித்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் 14 தொகுதிகளில் 11 இடங்களை பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. பாஜகவின் இந்தத் தொடர் வெற்றிகளுக்கு, அக்கட்சி முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களும், மத ரீதியான ஒருங்கிணைப்பு அரசியலும் முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்த வியூகங்கள் வாக்காளர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மறுபுறம், கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்ச அதிகாரத்தை இழந்து நிற்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கடுமையாகப் போராடி வருகிறது. இரு துருவப் போட்டியாக உருவெடுத்துள்ள இந்தத் தேர்தல், அசாம் மாநிலத்தின் எதிர்கால அரசியல் போக்கை நிர்ணயிக்கும் ஒரு முக்கியக் களமாக அமையவுள்ளது.
கருத்துக் கணிப்பு முடிவுகள்: வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சட்டவிரோத குடியேற்றம் போன்ற முக்கிய பிரச்சனைகள் பேசுபொருளாக உள்ளன. கருத்துக் கணிப்பில் அடுத்த முதல்வராக ஹிமாந்த் சர்மா 48% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக கூட்டணி 80 -90 இடங்களை வரை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 29- 39 இடங்களை வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
பெண் வாக்காளர்கள்: பெண் வாக்காளர்களிடம் பாஜக செல்வாக்கு பெற்றிருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அருணோதோய் திட்டம் தேர்தல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என 43% பேர் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை ஹிமாந்த் சர்மா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானதாக அருணோதோய் (Orunodoi) பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 40 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1250 நிதியுதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில், (பிப்ரவரி 13ம் தேதி அனைத்து உரிமைத் தொகை பயனாளிகள் அனைவருக்கும் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது போன்றே, அசாமில் கடந்த மார்ச்-10ம் தேதி அனைத்து பயனாளர்களுக்கு ₹9,000 அருணோதோய் பயனாளிகள் அனைவருக்கும் பணம் வரவு வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம், அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை 2025 மார்ச் 15 அன்று வெளியிட்டது.
அதன்படி, அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அசாமில் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள்.

