இரண்டு நாட்களாக உள்புறம் பூட்டப்பட்டிருந்த வாடகை பங்களாவிற்குள் இரண்டு சிறுமிகள், ஒரு சிறுவன், அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். கடைசியாக குழந்தைகளுக்கு கோட் சூட், நேர்த்தியான ஆடைகளுடன் கூலிங் கிளாஸ் அணிந்து அழகுபார்த்த பெற்ற தாய், கொலை பாதக செயலில் ஈடுபட்டுள்ளார். கொச்சியில் குலைநடுங்க வைத்த சம்பவத்தில் நடந்தது என்ன?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அஸ்வதி. 36 வயதான இவரது கணவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 14 மற்றும் 4 வயதில் இரு மகன்களும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். இதில், மூத்த மகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கணவன் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த அஸ்வதிக்கு, தனது மகனும் நோய்வாய்ப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, மகனின் மருத்துவ சிகிச்சைக்காக கொச்சிக்கு சென்றுள்ளார். அங்குள்ள வடுதலா பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் வாடகைக்கு தங்கியுள்ளார். மூன்று குழந்தைகளுடன் இருந்த அஸ்வதிக்கு, உறுதுணையாக அவரது தாயார் ஸ்ரீகுமாரியும் உடன் சென்றுள்ளார். இந்த நிலையில் இரண்டு நாட்களாக உள்புறமாக பூட்டியிருந்த வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இது தொடர்பாக வீட்டு ஓனர் தரப்பில் இருந்து அஸ்வதிக்கு போன் செய்தபோது, பதில் ஏதும் அளிக்கவில்லை. பின்னர், சந்தேகத்தின் பேரில் உறவினர் ஒருவரிடம் இருந்த மாற்று சாவி மூலம் வீட்டை திறந்துள்ளனர். அப்போது, அஸ்வதியும், அவரது தாயாரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அருகில் உள்ள படுக்கை அறையில் 4 வயது மற்றும் இரண்டு வயது குழந்தைகள் கோட் சூட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி போர்வையால் சுற்றி சடலமாக கிடந்துள்ளனர். மற்றொரு அறையில் 14 வயது சிறுவன் நேர்த்தியான ஆடைகளை உடுத்தியபடி உயிரற்ற உடலாக போர்வையில் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாயும், மகளும் சேர்ந்து மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அவர்களும் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்த போதும், உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதற்கட்டமாக கொலை மற்றும் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அஸ்வதி கடைசியாக எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில், மது போதைக்கு அடிமையான கணவன் தொடர்ந்து தகராறு செய்துவந்ததாக கூறியுள்ளார்.மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு தான், தான் காரணம் என்று கணவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியதாக வேதனை தெரிவித்துள்ளார். இதனால், ஏற்கனவே பலமுறை அஸ்வதி தற்கொலை முயற்சி மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.
இந்த சூழலில், மூத்த மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண், தனது தாயாருடன் சேர்ந்து மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு, அவர்களும் விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா?

