பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துதல் மற்றும் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் Masato Kanda மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) காலை இலங்கை வந்தடைந்தார்.
அவரை, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் திங்கட்கிழமை (23) முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், கொழும்பில் தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். மேலும், அவர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட அலுவலகத்திற்கும் (SLRM) விஜயம் செய்யவுள்ளார்.
நாளை (24) தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன், சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அம்பலங்கந்த பகுதிக்கும் சென்று, அங்கிருக்கும் மக்களுடன் கலந்துரையாடி ஏற்பட்ட சேதங்களை நேரடியாகக் கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது பொருளாதார மறுமலர்ச்சி, அபிவிருத்தி நிதியளிப்பு மற்றும் இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனா ஸ்ரேஸ்தா (Sona Shrestha), தலைவர் அலுவலக பிரதம ஆலோசகர் கெயிச்சிரோ இனுய் (Keiichiro Inui), சிரேஷ்ட ஆலோசகர் மனிஷா பிரதானாங்கா (Manisha Pradhananga) உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இவ்விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.







