கொழும்பு மாநகர எல்லைக்குள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை நாளை (23) திங்கட்கிழமை முதல் மீண்டும் அறவிடுவதற்கு கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
மாநகர சபையின் நிதி நிலைக்குழுவின் தீர்மானத்திற்கு இணங்க, நாளை காலை 6:00 மணி முதல் வாகனத் தரிப்பிட முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் கட்டண அறவீடுகள் வழமை போன்று ஆரம்பமாகும் என மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நிலவிய நீண்ட வாகன வரிசைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலைக் கருத்திற்கொண்டு, கடந்த 18 ஆம் திகதி முதல் தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ‘QR’ குறியீட்டு முறை மற்றும் வாகன இலக்கத் தகட்டின் அடிப்படையிலான விநியோகம் காரணமாக, வீதிகளில் நிலவிய வாகன நெரிசல் தற்போது குறைவடைந்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, கொழும்பு மாநகர சபையானது வழமையான வாகனத் தரிப்பிடக் கட்டண முறையை மீண்டும் அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளது.


