
தமிழ் ,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 100 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (20) தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சில் இன்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்படி, சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலையில் லங்கா சதொசவில் அரிசி உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
விலை குறைக்கப்பட்டுள்ள முக்கிய பொருட்களின் விபரங்கள்:
- வெள்ளை நாடு அரிசி: ஒரு கிலோ கிராம் – ரூபாய் 217
- வெள்ளை பச்சை அரிசி: ஒரு கிலோ கிராம் – ரூபாய் 203
- கோதுமை மா: ஒரு கிலோ கிராம் – ரூபாய் 254
- நெத்தலி: ஒரு கிலோ கிராம் – ரூபாய் 1,050
- பருப்பு: ஒரு கிலோ கிராம் – ரூபாய் 264
- பெரிய வெங்காயம்: ஒரு கிலோ கிராம் – ரூபாய் 150 முதல் 160 வரை
இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள நேரடிச் சலுகை என்பதால், வியாபாரிகள் மொத்தமாக கொள்வனவு செய்து இலாபம் ஈட்டுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
லங்கா சதொசவில் 2,500 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு விசேட பரிசுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யும் ஒவ்வொரு நுகர்வோருக்கும் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவதற்கு ஒரு கூப்பன் வழங்கப்படும்.
“சதொசவில் பொருட்களைக் கொள்வனவு செய்தால் காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வாய்ப்பு கிடைக்கும்” எனத் தெரிவித்த அமைச்சர், 2,500 ரூபாவிற்கு மேல் பொருட்களைக் கொள்வனவு செய்து அதிர்ஷ்டசாலியாக மாற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

