Last Updated:
தெலங்கானா மாநிலத்தில் சகோதரி அடித்துக் கொன்றுவிட்டு, போலீசிடம் காணாமல் போய்விட்டதாக நாடகமாடியவர் பிடிபட்டது எப்படி?
தெலங்கானா மாநிலத்தில் கணவனை இழந்த சகோதரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து, அவரை அடித்துக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் வீசிய சகோதரன் போலீசிடம் சிக்கியுள்ளார். சகோதரி காணாமல் போய்விட்டதாக நாடகமாடியவர் பிடிபட்டது எப்படி?
தெலங்கானா மாநிலம் ரங்காரா ரெட்டி மாவட்டம் படசிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான நீலாதேவி. இவருடைய சகோதரர் பப்புராம். சில ஆண்டுகளுக்கு முன்பு நீலாதேவியின் கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் சகோதரியின் நடத்தை மீது சகோதரர் பப்புராமுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்த பப்புராம், உன்னால் நம்முடைய குடும்ப மானம் காற்றில் பறக்கிறது என்று கூறி நீலாதேவியை கண்டித்து வந்துள்ளார்.
இந்த விஷயத்தில் இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. பலமுறை கண்டித்தும் கண்டுகொள்ளாத சகோதரியை கொலை செய்து, குடும்ப மானத்தை காப்பாற்ற பப்புராம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக தன்னுடைய நண்பர்களான ஹரியானாவை சேர்ந்த ராகேஷ், சுனில் ஆகியோரின் உதவியை நாடியிருக்கிறார் பப்புராம்.
இந்நிலையில் சகோதரியின் நடவடிக்கை தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பப்புராம், ஆவேசத்தில் சகோதரியை அடித்தே கொலை செய்திருக்கிறார். உடலை என்ன செய்வதென்று தெரியாத அவர், நான்கு நாட்களாக வீட்டிலேயே வைத்துள்ளார். உடல் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பிக்கவே, என்ன செய்வது என்பது புரியாத அவர், தன்னுடைய நண்பர்களான ஹரியானாவை சேர்ந்த ராகேஷ், சுனில் ஆகியோரை வரவழைத்துள்ளார்.
பின்னர், அவர்களது உதவியுடன் நீலாதேவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக்குப்பையில் போட்டு காரில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள ஏரியில் வீசியிருக்கிறார் பப்புராம். அதன்பின்னர், காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், கடந்த மாதம் 28ஆம் தேதி வேலை விஷயமாக வெளியில் சென்ற சகோதரி வீடு திரும்பவில்லை என்று கதறி அழுதிருக்கிறார். அவரை சமாதானப்படுத்திய போலீசார், புகாரை பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ஆரம்பத்தில் கதறி அழுதவர் அதன்பிறகு கண்டுகொள்ளவே இல்லையே என பப்புராம் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சகோதரியின் செயல்பாடுகள் காரணமாக குடும்ப மானம் காற்றில் பறப்பதாக கருதி, நான்தான் அடித்துக் கொலை செய்தேன் என்று பப்புராம் வாக்குமூலம் அளித்தார்.
ஆனால், போலீஸ் விசாரணையில் பப்புராமுக்கும், சகோதரி நீலாதேவிக்கும் இடையே நிலத்தகராறு ஒன்று இருந்து வந்தது தெரியவந்தது. பப்புராமும், நீலாதேவியும் சேர்ந்து நிலம் ஒன்றை வாங்கி இருந்தனர். அந்த நிலம் தற்போது பப்புராம் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பாதியை தன் பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நீலாதேவி கடும் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
எனவே, நீலாதேவியை குடும்ப கௌரவத்திற்காக பப்புராம் கொலை செய்தாரா? அல்லது சொத்து பிரச்சனையில் கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் பப்புராம் அவருக்கு உடந்தையாக இருந்த ஹரியானாவைச் சேர்ந்த ராகேஷ், சுனில் ஆகியோரையும் கைது செய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


