இன்றோடு ஈரான் போர் தொடங்கி 20 நாள்கள் ஆகிறது.
இந்தப் போர் ஈரானைத் தாண்டியும், இந்தியா வரை எப்படி மக்களைப் பாதித்துள்ளதோ, அதே மாதிரி உலக சந்தைகளையும் பாதித்துள்ளது.
கடந்த 19 நாள்களாக, ஈரான் போர் இந்திய சந்தை, உலக சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இன்றைய Opening Bell Show-ல் விவரித்திருந்தார், பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

“முதலில் கமாடிட்டியை எடுத்துக்கொள்வோம். கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,200 டாலர் அளவிற்கு வர்த்தகமானது.
ஈரான் போர் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியது. அது சனிக்கிழமை என்பதால், அன்று சந்தைக்கு விடுமுறை. அதனால், தங்க சந்தையில் ஈரான் போரின் தாக்கம் தெரியவில்லை. அதனால், இங்கே பிப்ரவரி 27-ன் தரவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று சர்வதேச சந்தையில், தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 4,844 – 4,890 டாலர்கள் அளவிற்கு வர்த்தகமானது.
போருக்கு முன்னால், வெள்ளியும் ஒரு அவுன்ஸிற்கு 86 – 87 டாலர் அளவிற்கு இருந்தது. ஆனால், நேற்று 76 – 77 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகியது.
ஆக, தங்கம், வெள்ளி விலை இரண்டுமே போருக்குப் பின், இறங்குமுகத்தைத் தான் சந்தித்துள்ளது.
ஆனால், போருக்குப் பின், கச்சா எண்ணெய் மிகப்பெரிய விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு பீப்பாவிற்கு 66 – 67 டாலர்கள் என்றிருந்த கச்சா எண்ணெய் 103 – 107 வரை கூட நேற்று சென்றது.

போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை, கச்சா எண்ணெய் உச்ச விலையாக ஒரு பீப்பாவிற்கு 119 டாலர்கள் வரை சென்றது.
இயற்கை எரிவாயுவை எடுத்துக்கொண்டால், முன்பு, ஒரு MMBtu-விற்கு 2.87 டாலர் என்றிருந்தது. இப்போது 3.04 – 3.05 டாலருக்கு உள்ளது. பிப்ர்வரி 28 – நேற்று வரை உச்சமாக, 4.5 டாலர்கள் வரை சென்றுள்ளது.
செம்பில் பெரியளவில் மாற்றம் நடக்கவில்லை. நிலையாகவே இருந்து வருகிறது.
தங்கம், வெள்ளி விலை ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது இறங்கி தான் உள்ளது.
கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 50 சதவிகித உயர்வைச் சந்தித்துள்ளது. அது நிலைத்தும் வருகிறது.
இயற்கை எரிவாயும் 12 – 13 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
நாணயம் சந்தையை இப்போது பார்க்கலாம்.
பிப்ரவரி 27-ம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.91.07 என்றிருந்தோம். இப்போது ரூ.92.7 வரைக்கும் சென்றுள்ளது. அதாவது இந்திய ரூபாய் பலவீனமடைந்துள்ளது… அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது.
இதை இன்னொரு கோணத்திலும் அணுகலாம். ஜப்பான் யென்னை எடுத்துக்கொள்வோம். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 151 – 152 ஜப்பான் யென்னாக இருந்தது.
இப்போது அது 159 – 160 யென் வரையில் சென்றுள்ளது. இதுவும் அமெரிக்க டாலர் வலுவாகி உள்ளதைக் காட்டுகிறது.

அடுத்ததாக, பங்குச்சந்தை பக்கம் வரலாம்.
பிப்ரவரி 27-ம் தேதி, டௌ ஜோன்ஸ் 49,800 என நிறைவடைந்திருந்தது. நேற்று 46,200 என்று நிறைவடைந்திருந்தது. இடையிடையே ஏற்றம், இறக்கம் இருந்தாலும், கிட்டத்தட்ட 3,000 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது டௌ ஜோன்ஸ்.
நிக்கேய் 225 கடந்த 27-ம் தேதி 39,000 என்றிருந்தது. இப்போது 53,000-ல் இருக்கிறது. ஜப்பான் சந்தை ஏற்றத்தை சந்தித்து இருக்கிறது.
26,700 என்றிருந்த ஹாங்காங் சந்தையான ஹேங்சென் 25,000-ல் வர்த்தகமாகி வருகிறது. இங்கே சின்ன சரிவை சந்தித்துள்ளது.
தென் கொரிய சந்தை ஏற்றத்தை தான் சந்தித்துள்ளது.
இந்திய சந்தையைப் பொறுத்தவரை, நிப்டி 25,128 என்று பிப்ரவரி 27-ம் தேதி நிறைவடைந்திருந்தது. இப்போது 23,777 என நேற்று முடிவடைந்திருக்கிறது.
ஆனால், இடையில் நிப்டி 22,955 என ‘லோ’-வை பதிவு செய்தது.
ஆக, ஜப்பான், கொரியாவை தவிர, பிற உலக சந்தைகள் பெரும்பாலும் சரிவை தான் சந்தித்துள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியில் பல கப்பல்களின் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்போது சரக்கு கட்டணத்தையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
Very Large Container Ships-ன் ஒரு நாளைய விலை முன்பு 2.9 ஆயிரம் டாலர்களாக போருக்கு முன்பு இருந்தது. இப்போது 4.7 ஆயிரம் டாலர்களாக மாறி உள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தப் போர் பணவீக்கத்தை அதிகரிப்பது, சில பொருள்களின் பற்றாக்குறையை அதிகரிப்பது போன்றவற்றைச் செய்தாலும், பல உயிர்களின் பலியை நிச்சயம் சொல்லியாக வேண்டும்.
இன்னும் இந்தப் போர் எதற்காக என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அதற்குள் இந்தப் போரினால் இவ்வளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது”.
(இது இன்று காலை வரையிலான தரவுகளின் படியானது ஆகும்)

