Last Updated:
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சேலம் அப்பாசாமி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார்.
என்.ஆர். காங்கிரஸின் தலைவரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி, தனது ஆன்மீக குருவான சேலம் அப்பாசாமி கோயிலில் இன்று இரவு வழிபாடு செய்ய இருக்கிறார். இதற்காக ரங்கசாமி சேலத்திற்கு புறப்பட்டார்.
லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி எனும் புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கினார். கட்சி தொடங்கிய ஒரு மாதத்திலேயே வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து சந்திப்பது என முடிவெடுத்து, அந்தக் கூட்டணியில் இணைந்தார்.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக ஆகியவை என்.டி.ஏ. கூட்டணியில் உள்ளன. இந்தக் கூட்டணியின் தொகுதி பங்கீடு கடந்த 13ஆம் தேதி முடிவானது. இதில், என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும், பாஜகவின் 14 தொகுதிகளில் அதிமுக மற்றும் லஜகவுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டணி முடிவாகி, தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையிலும் என்.ஆர். காங்கிரஸ், என்.டி.ஏ. கூட்டணியில் தொடருமா எனும் சந்தேகம் இருந்துவருகிறது. குறிப்பாக ல.ஜ.க.வை என்.டி.ஏ. கூட்டணியில் சேர்க்கக் கூடாது என என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வலியுறுத்திவருகிறார்.
இந்நிலையில் அவர் அமாவசையான இன்று திடீரென சேலத்தில் உள்ள தனது ஆன்மீக குருவான சேலம் அப்பாசாமி கோயிலுக்குச் சென்று அங்கு இரவு வழிபாடு செய்ய இருக்கிறார். ரங்கசாமி, எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு எடுப்பதை வழக்கமாகவைத்துள்ளார்.
என்.டி.ஏ. கூட்டணியில் அவர் அதிருப்தியில் இருந்துவரும் சூழலில், சேலம் அப்பாசாமி கோயிலுக்கு செல்வது பெரும் கவனம் பெற்றுள்ளது. அந்தக் கோயில் சென்று வழிபாடு செய்த பிறகு அவர் என்.டி.ஏ. கூட்டணியில் தொடரும் முடிவை எடுப்பாரா, தனித்து போட்டியிட முடிவெடுக்கிறாரா அல்லது தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறாரா என்பது தெரியவரும் சொல்லப்படுகிறது.
Puducherry (Pondicherry)
என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா என்.ஆர். காங்கிரஸ்? சேலத்தில் முடிவெடுக்கும் ரங்கசாமி?


