
தீப்பற்றியைத் தொடர்ந்து ஈரானுக்கெதிரான நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் விமானந் தாங்கிக் கப்பலான ஜெரால்ட் ஆர். போர்ட்டானது தற்காலிகமாக துறைமுகத்துக்குச் செல்லுமென ஐ. அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய விமானந் தாங்கிக் கப்பலான ஜெரால்ட் ஆர். போர்ட், தற்போது செங்கடலில் காணப்படும் நிலையில், கிரேக்கத் தீவான கிறெட்டெயிலுள்ள சூன்டா வளைகுடாவுக்குச் செல்வதாக இரண்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கப்பலின் பிரதான சலவைப் பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக ஏறத்தாழ 200 வீரர்கள் புகை தொடர்பான காயங்களுக்காக சிகிச்சை பெற்றதாக ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பல மணித்தியாலங்களுக்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதுடன் 100 படுக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

