Last Updated:
ஜார்க்கண்ட் பழங்குடியின குடும்பத்தினர், தங்களுக்கு எதிராக மாந்திரீக பூஜை செய்து சூனியம் வைத்ததாக கூறி கொடூர படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைத்ததாகக் கூறி பழங்குடியின குடும்பத்தினரை, கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. படுகொலை சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன?
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் தங்கா தோலா கிராமத்தில்தான் அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கியிருந்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனிமையில் இருந்த அந்த வீட்டிற்குள், 55 வயதான தர்பாரி முர்மு, அவரது மனைவி மகி பாஸ்கி மற்றும் அவர்களது 12 வயது மகன் ஜித்நாராயண் முர்மு ஆகியோர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
தூரத்தில் காட்டு மரங்களுக்கு நடுவே மறைந்திருந்த அந்த கோடாரிக் கும்பல், அந்த வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கொடூர ஆயுதங்களுடன் கும்பலாக அந்த வீட்டை நெருங்கிய அவர்கள், வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மூவரையும் கோடாரியால் சரமாரியாக வெட்டித் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். மறுநாள் அந்த கிராமமே அந்த இடத்தில் கூடிவிட்டது. தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
நள்ளிரவில் வந்த கோடாரிக் கும்பல் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் போலீசாருக்குத் தெரியவந்தது. குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்குள் பிடிக்க எண்ணி, போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கோடாரியையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது கொலைக்கான திடுக்கிடும் காரணம் தெரியவந்தது.
பழங்குடியின குடும்பத்தினர், தங்களுக்கு எதிராக மாந்திரீக பூஜை செய்து சூனியம் வைத்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதி பழங்குடியினத்தவர் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்ட பழங்குடியின குடும்பத்தினர்… சூனியம் வைத்ததாகக் கூறி வெறிச்செயல்…


