ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நல்லகுட்டபள்ளி அருகே முரட்டு ஆசாமி ஒருவர், கழுத்துவரை குடித்துவிட்டு “தண்ணித்தொட்டி தேடிவந்த கண்ணு குட்டி நான்” என சலம்பியபடி வந்திருக்கிறார். அங்கிருந்த பொதுமக்களை தன்னோடு சேர்ந்து பாடும்படியும், தன்னைப்போல நடனம் ஆடும்படியும் பெரும் ஏழரையை கூட்டியிருக்கிறார்.
அங்கிருந்த சிலர் அமைதியாக வீட்டுக்கு செல்லும்படி வலியுறுத்தியும், “அதைச் சொல்ல நீ யார்? நான் அப்படித்தான் ஆடுவேன்” என சட்டையை கழற்றிப் போட்டு விட்டு அலங்கோலமாக இடுப்பு டான்ஸ் ஆடி இருக்கிறார். அதைப் பார்த்து சகிக்க முடியாத சிலர், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்க, பதிலுக்கு கடுமையாக மிரட்டி பெரும் ரகளை செய்திருக்கிறார் அந்த முரட்டு போதை ஆசாமி.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்த பொதுமக்கள், போலீசாரை செல்போனில் அழைத்து தயவு செய்து அந்த ஆளை அங்கிருந்து கூட்டிச் செல்லுமாறு வலியுறுத்தி இருக்கின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்புப் படை போலீஸ் கான்ஸ்டபிள் தனுஞ்செயா உடனே போலீஸ் வாகனத்தை எடுத்துக்கொண்டு அப்பகுதிக்கு தனியாகச் சென்றுள்ளார்.
யாரோ ஒரு குடிகாரன் பப்ளிக் நியூசென்ஸ் செய்து கொண்டிருக்கிறான். அந்த ஆசாமியை வாகனத்தில் அள்ளிப்போட்டுக் கொண்டு காவல் நிலையம் சென்றுவிடலாம் என வந்தவருக்கு ஷாக் காத்திருந்தது. அந்த முரட்டுக் குடிகாரர், காவலர் தனுஞ்செயாவுக்கு கடும் சவாலைக் கொடுத்திருக்கிறார்.
ஒரு வழியாக பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்த முரட்டு ஆசாமியை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி கதவை பூட்டி இருக்கின்றனர். ஆனால், அந்த போதை ஆசாமியோ, கான்ஸ்டபிள் தனஞ்செயாவை கடுமையாக தாக்கி பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார். இது என்னடா பெரும் சோதனையாக போய்விட்டதே என நினைத்த சில இளைஞர்கள் அங்கிருந்த கட்டைகள், தடிகள் ஆகியவற்றால் அந்த முரட்டு ஆசாமியை தாக்க முயன்றனர்.
இதனால், ஆத்திரம் தலைக்கேறிய அந்த ஆசாமி, திடீரென்று போலீஸ் வாகனத்தின் பின் இருக்கையில் இருந்து டிரைவர் இருக்கைக்கு தாவி வந்து, போலீஸ் வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பி ஓடினார். அந்த வாகனத்தை மடக்கிப் பிடிக்க பொதுமக்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக, இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் பறக்க, போலீசார் அனைவருக்கும் உத்தரவுகள் பறந்துள்ளன.
தொடர்ந்து கங்காவரம் அருகே சென்றபோது, எதிரே பெரிய ஏரி ஒன்று இருந்ததால், வாகனத்தை நிறுத்திவிட்டு ஏரிக்குள் குதித்திருக்கிறார். சற்று தூரம் நீந்திச்சென்ற பின்னர்தான், அவ்வளவு பெரிய ஏரியை நீந்தி கடக்க முடியாது என புரிந்துகொண்ட அந்த நபர் மீண்டும் நீந்தி கரைக்கே வர ஆரம்பித்துள்ளார். கரையில் போலீசார், பொதுமக்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் போதை ஆசாமியால் விபத்தில் சிக்கியவர்கள் என அனைவரும் ஆத்திரத்துடன் அவரது வருகைக்காக காத்திருந்தனர்.
கரைக்கு வந்தவரை கைத்தாங்கலாக பிடித்து இழுத்துப் போட்டு அங்கேயே கொத்து பரோட்டா போட்டுள்ளனர். கங்காவரம் போலீசார் அவரை மீட்டு நடத்திய விசாரணையில், 36 வயதான ரத்னாதரா என்பதும், பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், மதுபோதை வெறியில் குடும்பத்தினரையும் இதுபோல் கடுமையாக தாக்கியதும், மனைவியை சமீபத்தில் கடுமையாக தாக்கி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
விசாரணைக்கு பின்னர் ரத்னாதராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதியின் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

