Last Updated:
சுமார் 4,00,000 நோயாளிகளுக்குச் சேவை செய்யும் 90 சூடான் அரசு மருத்துவமனைகள், நாட்டில் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி தவித்து வருகிறது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் காரணமாக, மத்திய கிழக்கிலுள்ள நாடுகள் அனைத்துமே கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் சூடானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடும் என்பதால் விரைவில் பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக வான்வெளி மூடல்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தம் என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உலுக்கியுள்ளது. அந்த வகையில் சுமார் 6,00,000 டாலர் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள் துபாயில் உள்ள துறைமுகங்களில் சிக்கியுள்ளன. இதனால் சுமார் 4,00,000 நோயாளிகளுக்குச் சேவை செய்யும் 90 சூடான் அரசு மருத்துவமனைகள், நாட்டில் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி தவித்து வருகின்றன.
மருந்து
Save the Children என்ற தொண்டு நிறுவனம் இதுபற்றி கூறுகையில், “இன்னும் இரண்டு வாரங்களில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படாவிட்டால், பல நோயாளிகள் அடிப்படை மருத்துவ வசதியே கிடைக்காமல் அவதிப்படுவார்கள். ஆண்டிபயாடிக்ஸ், குடற்புழு நீக்க மருந்துகள், வலி, காய்ச்சல் மருந்துகள், குழந்தைகளுக்கான மருந்துகள், டெங்கு – மலேரியாவுக்கான தடுப்பு மருந்துகள் என பல மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது” என்றுள்ளது. இதற்கிடையே தற்போது விநியோகப் பாதை மாற்றப்படுவதால், சூடானில் சரக்குக் கட்டணம் 25 – 30% உயர்ந்துள்ளது. ஏற்கெனவே போர்ச்சூழலால் சூடானுக்கு நன்கொடை அளிக்கும் சில நிறுவனங்கள் பின்வாங்கியுள்ளதால், அங்கு கடுமையான நிதித்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருந்துகள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
Mar 18, 2026 11:38 AM IST

