இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் எப்போது முடியும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்போர் காரணமாக உலக நாடுகளுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகள் தங்களது கப்பல்களை அனுப்பவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இக்கோரிக்கைக்கு எந்த நாடும் சாதகமாக பதில் கொடுக்கவில்லை.
இதற்கிடையே இப்போரில் ஈரானின் புதிய மத உச்ச தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் அவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து இதுவரை வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவருக்கு இத்தாக்குதலில் காலில் மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவர் இப்போது படுகாயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின், ஈரான் ஜனாதிபதி மசூத்திடம் போனில் பேசியபோது தெரிவித்துள்ளார் என்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருந்தால் மொஜ்தபாவிற்கு ஈரானில் சிகிச்சை கொடுக்க சரியாக இருக்காது என்று கருதி, அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி சிகிச்சை கொடுக்க ஈரான் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து அவர் மிகவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் ரஷ்ய ராணுவ விமானத்தில் ரஷ்யாவிற்கு அனுப்பி அவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ரஷ்யாவில் புதின் வீட்டு வளாகத்திற்குள் இருக்கும் மருத்துவமனையில் மொஜ்தபாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கேயே அவர் தொடர்ந்து குணமடைந்து வருவதாகவும் அல் ஜெசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மத உச்ச தலைவர் மொஜ்தபாவை இஸ்ரேல் குறிவைக்கும் அபாயம் இருக்கிறது. அதோடு அவர் ஈரானில் தொடர்ந்து சிகிச்சை பெற்றால், அவருக்கு சிகிச்சை கொடுக்கும் யாராவது அவர் தங்கி இருக்கும் இடம் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.
