Last Updated:
தனது ரகசிய காதலனை கரம்பிடிப்பதற்காக வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்து, கணவனை மிரட்டி ஜீவனாம்சம் பெற சதித்திட்டம் தீட்டிய பெண் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கணவன் மீது வரதட்சணை புகார் கொடுத்த இளம்பெண், தனது ரகசிய காதலனுடன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவனை நம்ப வைத்து ஏமாற்றி பணம் பறிக்க முயற்சித்தவர் சிக்கியது எப்படி?
தனது ரகசிய காதலனை கரம்பிடிப்பதற்காக கணவனிடம் ஜீவனாம்சம் பெற சதித்திட்டம் தீட்டியவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டதால், அவரை நம்புவது போல் நாடகமாடிய கணவன் சதி வலையில் இருந்து கிரேட் ஏஸ்கேப் ஆகியுள்ளார்… நடந்தது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கணவன் – மனைவி இருவரும் இல்லற வாழ்க்கையை இனிமையாக தொடங்கியுள்ளனர்.
ஆனால், அண்மைக் காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தம்பதி இடையே விரிசல் அதிகரித்ததால் இனியும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு இளம்பெண் வந்துள்ளார். அத்துடன், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இளம்பெண்ணின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவரை காதல் கணவன் கண்காணிக்க தொடங்கியுள்ளார். அதில், நிகில் என்ற வேறொரு இளைஞருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ரகசிய காதலனை கரம் பிடிக்கவே தன்மீது வரதட்சணை புகார் கொடுத்ததையும் அறிந்துள்ளார். அதன் மூலம் தன்னிடம் ஜீவனாம்சம் என்ற பெயரில் பணம் பறிக்க சதித்திட்டம் போட்டதையும் அறிந்து அதிர்ந்து போயுள்ளார்.
இந்த சூழலில் அலிகாரில் உள்ள ஓட்டலுக்கு ரகசிய காதலனுடன், இளம்பெண் ரகசிய விசிட் அடித்துள்ளார். அது அவரது கணவர் ஆகாஷ் குமாருக்கு தெரியவந்துள்ளது. உடனே, சுதாரித்துக் கொண்ட ஆகாஷ், உள்ளூர் போலீசாருடன் அந்த ஓட்டலுக்குச் சென்றுள்ளார். பின்னர், போலீசார் இளம்பெண்ணை, அவரது ரகசிய காதலனுடன் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட ஆகாஷ் குமார் வரதட்சணை கொடுமை என்ற பெயரில், தன்னை போலீசில் சிக்க வைக்க காதல் மனைவியே சதித்திட்டம் தீட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். இதுபோன்று, ஆண்களை பகடைக் காயாக்க நினைக்கும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


