நடிகர் சல்மான் கான் நடித்து வரும் படமான பேடில் ஆஃப் கல்வான் படம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே நடந்த இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகள் முற்றிலும் முடங்கிப்போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் சீனாவின் முதலீட்டை மத்திய அரசு சமிபத்தில் அனுமதித்தது. இந்நிலையில் பேடில் ஆஃப் கல்வான் படத்தின் பெயரை திடீரென மாற்றி இருக்கின்றனர்.
புதிய படத்திற்கு ‘மாத்ருபூமி May War Rest in Peace’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். புதிய தலைப்பை அறிவித்து வெளியிட்டு இருக்கும் போஸ்டரில் “போர் அமைதியில் ஓய்வெடுக்கட்டும்” என்ற செய்தியைக் கொண்டதாக இருக்கிறது.

இந்தப் படம் வெறும் போர்க் கதையை தாண்டி போரின் மனிதப் பக்கத்தையும் அமைதியின் முக்கியத்துவத்தையும் மையமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்புவதாக போஸ்டர்கள் கூறுகின்றன. இப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது.
ஆனால் இப்போது திரைக்கு வரும் தேதியை சுதந்திர தினத்திற்கு தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகீறது. ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் பட்சத்தில் சன்னி தியோல் நடிக்கும் லாகூர் 1947 படத்துடன் இப்படம் மோதிக்கொள்ளும். ஆகஸ்ட் 13ம் தேதி லாகூர் 1947 படம் வெளி வருகிறது. கல்வான் மோதல் சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. சமீப ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்த மிக முக்கியமான ராணுவ மோதல்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
இக்கதை நிஜ நிகழ்வுகளையும், இப்பிராந்திய அரசியல் பதற்றங்களையும் மையமாகக் கொண்டிருப்பதால், திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அது விவாதங்களை எழுப்பத் தொடங்கிவிட்டது. இந்த ராணுவ மோதலோடு தொடர்புடைய விஷயம் என்பதாலும், மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதாலும் திரைப்படத்தை உருவாக்கியவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பெயரை மாற்றிவிட்டனர் எனச் சொல்லப்படுகிறது.

