Last Updated:
நான்கு வயது சிறுவனைப் பெற்ற தந்தையே, தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 4 வயது சிறுவனை சூடு வைத்தும், கத்தி, பெல்ட்டால் தாக்கியும், கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து தந்தையே கொலைபாதகச் செயலில் ஈடுபட்டு கைதாகியுள்ளார். நடந்தது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுக் பகுதியைச் சேர்ந்தவர் பீஷ்மா கர்பந்தா. 35 வயதான இவரது மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். 4 வயதில் மகன் உள்ள நிலையில், பீஷ்மா 30 வயதான ராகினி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். திருமணமான சில நாட்களிலேயே ராகினி, 4 வயது சிறுவனை தொட்டதற்கு எல்லாம் குறைகூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். அதை பீஷ்மா கண்டும், காணாமலும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுவனின் அம்மாவழிப் பாட்டியான சுதா காஷ்யப்பிற்கு பீஷ்மா போன் செய்துள்ளார். அப்போது, உங்களது பேரன் இறந்துவிட்டார் என கூறியுள்ளார். ஏற்கனவே மகள் இறந்த நிலையில், அவர் நினைவாக உள்ள பேரனும் இறந்த தகவலை கேட்டு உறவினர்கள் பதறியடித்து ஓடி வந்துள்ளனர். லக்னோ வந்து பார்த்ததும் நான்கு வயது சிறுவனின் உடலை வீட்டு வராண்டாவில் அனாதையாக போட்டு வைத்துள்ளனர்.
பின்னர், கால்களில் சூடு போட்ட தழும்பு மற்றும் உடலில் ஆங்காங்கே நீல நிறத்தில் காயம் இருந்ததைக் கண்டு இதயம் நொறுங்கிப் போயுள்ளது. மேலும், கத்தியால் உடலில் காயம் ஏற்படுத்தியதையும் பார்த்து பதறிப் போயுள்ளனர். உடனே, சிறுவனின் பாட்டி, தனது மருமகன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
நான்கு வயது சிறுவனைப் பெற்ற தந்தையே, தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


