செ.தி. பெருமாள்
QR நடைமுறையின் கீழ் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி மற்றும் தனியார் வாடகை வாகனச் சாரதிகள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயம் குறித்து சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ள முக்கிய விபரங்கள் வருமாறு:
முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 15 லீட்டர் எரிபொருள், தமது அன்றாடத் தொழில் நடவடிக்கைகளுக்கு எவ்வகையிலும் போதுமானதாக இல்லை எனச் சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். தமது வாழ்வாதாரத்தைச் சீராக முன்னெடுத்துச் செல்ல வாராந்தம் குறைந்தபட்சம் 30 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடகை அடிப்படையில் சேவையில் ஈடுபடும் வேன்களுக்கு வழங்கப்படும் 40 லீட்டர் எரிபொருள் மிகக்குறைந்த அளவாகும் என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கு வாராந்தம் தமக்கு 80 லீட்டர் எரிபொருள் அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தனியார் பேருந்துகள் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தின் (இலங்கை போக்குவரத்துச் சபை) ஊடாகத் தமக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே உணவு, வீட்டு வாடகை, பிள்ளைகளின் கல்விச் செலவு, மருந்துச் செலவுகள் மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகளைத் தாம் ஈடுகட்டுவதாகச் சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய எரிபொருள் கட்டுப்பாடுகளால் தமது அன்றாட வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் அவசர கவனம் செலுத்தி, தொழில் நிமித்தம் வாகனங்களைச் செலுத்துவோருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஸ்கெலியா பகுதி வாகனச் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


