கொழும்பின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசைகளாகப் பெருமளவில் திரண்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இன்று (15-03-2026) முதல் மீண்டும் QR குறியீடு (QR Code) முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது குறித்து எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டிருந்த விசேட அறிக்கையின்படி, இன்று காலை 06:00 மணி முதல் நாடு முழுவதும் எரிபொருள் கொள்வனவுக்காக QR முறைமை மீண்டும் செயலுக்கு வந்துள்ளது.
சடுதியான நெரிசல்
இந்தநிலையில், இன்று அதிகாலை முதலே கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்குச் சாரதிகள் படையெடுத்துள்ளனர்.

இதில், காலை நேரத்தைவிட நண்பகல் வேளையில் வாகனங்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதுடன், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய எரிபொருள் இருப்பு குறித்து ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே இந்தச் சடுதியான நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
விநியோகப் பாதை
மத்திய கிழக்கு இராணுவச் சூழலால் விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் நாட்டில் அதிகரித்துள்ள அசாதாரண தேவை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்த QR முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த எரிபொருள் விநியோகத் தடைகளைச் சமாளிக்கவும், உள்நாட்டில் நிலவும் எரிபொருள் இருப்பை முறையாகப் பங்கீடு செய்யவும் இந்த QR முறைமை தற்போதைய சூழலில் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
பொதுமக்கள் இந்தப் புதிய நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், எரிபொருள் நிலையங்களில் சீரான விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |








