Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உலகளாவிய கடற்படை ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்பகுதியில், போர்க்கப்பல்களை நிலைநிறுத்துமாறு உலக வல்லரசு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் இரண்டு வாரங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. மற்றொரு பக்கம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈராக்கில் உள்ள உம் காசர் துறைமுகம் அருகே அமெரிக்க டேங்கர் கப்பலான சஃபேசியா, ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது.
மட்டுமன்றி இஸ்ரேலின் ஈலாட்டில் (Eilat) ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் இதற்கு முன் கண்டிராத அளவிலான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் அமெரிக்கா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இருப்பினும் அமெரிக்க தாக்குதலையும் மீறி, இரண்டு ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல்களில் கார்க் தீவில் இருந்து 2.7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஏற்றியதாக ஈரான் கூறியுள்ளது.
பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்பஹான் பகுதியில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்தியுள்ளது. ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்களை அதிகரித்து வருவதால், அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு தனது 2,500 யூனிட் கடற்படையினரை அனுப்ப போர் செயலாளர் பீட் ஹெக்செத் ஒப்புதல் அளித்துள்ளார். ஈராக்கின் தலைநகர் பாக்தாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.
மற்றொரு பக்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ள முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக உள்ள ஃபுஜைராவில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டு, சில எண்ணெய் ஏற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், இடைமறிக்கப்பட்ட ஈரானிய ஏவுகணையின் குப்பைகளால் பெரிய அளவிலான புகை வெளியேறுவதாக ஃபுஜைராவின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
Some oil-loading operations have been suspended in the United Arab Emirates’ Fujairah emirate, a major bunkering hub and crude export terminal, after a drone attack and fire pic.twitter.com/j21vTxw5G2
— Reuters (@Reuters) March 14, 2026
துபாயில் உள்ள சிட்டி வங்கி கிளையை ஈரான் ட்ரோன்களால் தாக்கியது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மண்டல சிட்டி வங்கி கிளைகள் அவற்றின் சில செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளன. துபாயிலுள்ள துறைமுகம், அபுதாபியிலுள்ள கலிபா துறைமுகம், யுஏஇயின் ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உலகளாவிய கடற்படை ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்பகுதியில், போர்க்கப்பல்களை நிலைநிறுத்துமாறு உலக வல்லரசு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, அண்டை நாடுகளை குறிவைக்க வேண்டாம் என ஹமாஸ் அமைப்பு, ஈரானை கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்… ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அழைப்பு விடுத்த ட்ரம்ப்!

