செ.தி.பெருமாள்
நுவரெலியாவில் இருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (13) மாலை 4:30 மணியளவில் மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரொக்வூட் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (12) நுவரெலியா பகுதியிலிருந்து இரண்டு வாகனங்களில் ஒரு குழுவினர் சிவனொளிபாத மலைக்குச் சென்றுள்ளனர். இன்று மாலை அவர்கள் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ரொக்வூட் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான காரில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். இவர்களில் மூன்று ஆண்கள் காயமடைந்த நிலையில், பின்னால் வந்த காரில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மலையக வீதிகளில் பயணிக்கும்போது போதிய ஓய்வுடனும் அவதானத்துடனும் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.





