மேலும், அரபிக்கடலில் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து ஆசியா உள்பட உலகின் பிற பிற பகுதிகளுக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விநியோகம் தடையால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை, ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரான் அனுமதி அளிக்கும்பட்சத்தில் கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவுக்கான பயணத்தை தொடர முடியும்.
இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சயது அப்பாஸ் அராக்சியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்குப்பின் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சயது அப்பாசுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவது இது 4வது முறையாகும்.
இந்த பேச்சுவார்த்தையின்போது அரபிக்கடலில் ஈரான் அருகே நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்களை ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எந்தவித சிக்கலும் இன்றி செல்ல அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
