எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து எவ்வித சட்டபூர்வ அனுமதிப்பத்திரமும் இன்றி சுமார் 4,000 லீட்டர் மண்ணெண்ணெயைக் கடத்திச் செல்ல முயன்ற லொறி ஒன்றை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கடந்த (05) ஆம் திகதி அதிகாலை வேளையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு பெரிய தாங்கிகளில் (Tanks) மண்ணெண்ணெய் நிரப்பப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் உடனடியாகச் செயற்பட்டு லொறியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த மண்ணெண்ணெய் கிதுல்கலையிலிருந்து கேகாலை நோக்கிச் கொண்டு செல்லப்படவிருந்ததாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து கிதுல்கலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறியுடன் அதன் சாரதி மற்றும் உதவியாளரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிதுல்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


