இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் IRIS Dena என்ற ஈரானிய போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட டொர்பிடோ (torpedo) தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள், விசேட விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளன.
குறித்த விடயத்தைப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், மேற்படி நடவடிக்கை இன்று (13-03-2026) முன்னெடுக்கப்படவுள்ளது.
மனிதாபிமான அடிப்படை
கடந்த சில நாட்களாகக் காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இந்த உடல்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஈரானியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தற்போது உடல்கள், மத்தள சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அங்கிருந்து ஈரானிய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட விமானம் ஊடாக உடல்கள் அனைத்தும் தாயகத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.
இந்தத் தாக்குதல் சம்பவமானது சர்வதேசக் கடற்பரப்பில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் உடல்களைத் துரிதமாகத் திருப்பி அனுப்புவதற்கான அனைத்து இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

