Last Updated:
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல் உரிமையாளர்கள் காய்கறிகள் வாங்குவதை குறைத்துள்ளனர்
நாமக்கல் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக ஹோட்டல் உரிமையாளர்கள் காய்கறிகள் வாங்குவதை குறைத்ததால், மொத்த சந்தைகளில் காய்கறிகள் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த காய்கறி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் உருவாகியுள்ள அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையிலான பதற்றம் காரணமாக எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக நாமக்கல் பகுதியில் வணிக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முழுமையாக செயல்பட முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் செயல்பட்டு வரும் தினசரி மொத்த காய்கறி சந்தையில் விற்பனை கடுமையாக குறைந்துள்ளது. வழக்கமாக ஹோட்டல் உரிமையாளர்கள் அதிக அளவில் வாங்கும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பூசணிக்காய், முட்டைகோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் தற்போது வாங்கப்படாமல் குவிந்து கிடக்கின்றன. சில இடங்களில் காய்கறிகள் வெயிலில் காய்ந்து கெட்டுப்போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தினசரி சந்தை மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், “சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் உரிமையாளர்கள் காய்கறிகள் வாங்குவதை குறைத்துள்ளனர். முன்பு மூட்டைக்கணக்கில் வெங்காயம், உருளைக்கிழங்கு வாங்குவார்கள். தற்போது யாரும் வாங்காததால் காய்கறிகள் தேங்கி கிடக்கின்றன. வாங்குபவர்கள் இல்லையெனில் காய்கறிகளை கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக விற்பனை குறைந்ததால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், காய்கறி வியாபாரிகள் மற்றும் ஹோட்டல் தொழிலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

