கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் மோதி அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் வாகனத்தின் ஹேண்ட் பிரேக்கில் ( Handbrake) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்து நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது மோதியுள்ளது.
அதில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றைய மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
தான் வாகனத்தை முறையாக நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்கிச் சென்ற பின்னரே, எதிர்பாராத விதமாக இந்த விபத்து இடம்பெற்றதாக குறித்த பணிப்பாளர், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

