Last Updated:
சுகாதாரமற்ற முறையில் ரசாயனம் கலந்து இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கப்பட்ட சம்பவம் ஐதராபாத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் சுகாதாரமற்ற முறையில் ரசாயனம் கலந்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் உயிருடன் விளையாடிய கும்பல் மீது கடும் நடவடிக்கை பாயுமா?
உடல் உபாதைகளை தவிர்க்க உணவில் இஞ்சி, பூண்டு சேர்த்தால் போதும் என்று பலரும் கூவிக் கூவி விளம்பரம் செய்வதைப் பார்த்திருப்போம். அதையே மூலதனமாக்கி ஐதராபாத்தில் ஒருவர் ரசாயனம், செயற்கை நிறமிகளை சேர்த்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்துள்ளார். பார்க்கவே குமட்டிக்கொண்டு வரும் அளவுக்கு சுகாதாரமற்ற வகையில் தயாரித்த பேஸ்ட்டை பெட்டிக் கடை மூலம் ரெஸ்டாரண்ட் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஹபீப் நகர் பகுதியில் தரமற்ற முறையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகமது பரூக் என்பவரின் தொழிற்சாலைக்குள் நுழைந்தனர். அங்கு நடந்த காட்சியைப் பார்த்து அதிகாரிகளே ஆடிப் போயுள்ளனர். அந்த அளவிற்கு சுகாதாரமற்ற முறையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. தரமற்ற மூலப் பொருட்களை பயன்படுத்தி பேஸ்ட் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்க சம்பந்தமே இல்லாத ரசாயனம், நிறமிகள் உள்ளிட்டவையும் அங்கு இருந்துள்ளன. பின்னர், சந்தேகத்தின்பேரில் உணவுப் பொருளை பரிசோதித்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அங்கிருந்த அசிட்டிக் அமிலம், ரசாயனப் பொருட்கள், பசை, உப்பு போன்றவற்றை கலந்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்ததும் அம்பலமாகியுள்ளது.
குறிப்பாக, திறந்தவெளியில் அசுத்தமான முறையில் தயாரித்த உணவுப் பொருள் சாப்பிடுவதற்கு தகதியற்ற முறையில் பராமரிப்பின்றி சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆயிரம் கிலோவுக்கு அதிகமான அளவில் தரமற்ற இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமது பரூக்கை கைது செய்தனர்.
விசாரணையில், இங்கு தயாரிக்கப்பட்ட பொருட்கள் பெட்டிக்கடை முதல் சில்லறை விற்பனை, மொத்த விற்பனை மற்றும் ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் தரமற்ற முறையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரித்த விவகாரத்தில் முகமது பரூக் மட்டும்தான் ஈடுபட்டாரா? அல்லது அவருக்கு பின்னால் பெரிய நெட்வொர்க் இயங்கியதா என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சுகாதாரமற்ற முறையில் ரசாயனம் கலந்து இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கப்பட்ட சம்பவம் ஐதராபாத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரமற்ற முறையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பு… மக்கள் உயிருடன் விளையாடிய கும்பல் மீது நடவடிக்கை பாயுமா…?


