
ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 8 சதவீதம் குறைந்து 90 டாலர் அளவிற்கு சரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக சந்தையில் கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலை நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் சுமார் 87.88 அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், ஒரு பீப்பாய் அமெரிக்க கச்சா எண்ணெய் சுமார் 83.35 அமெரிக்க டாலராக வர்த்தகமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2022க்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டாலரைத் தாண்டி அதிகபட்சமாக 119 டாலர் வரை உயர்ந்திருந்தது. மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் போர் பதற்றம் இதற்கான முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியிட்ட கருத்தில், “போர் மிக விரைவில் முடிவடையும்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு சந்தையில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர், ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 8 சதவீதம் குறைந்து 90 டாலர் அளவிற்கு சரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஈரான் தொடர்பான போர் நிலைமை காரணமாக கடந்த சில நாட்களாக எண்ணெய் விலையில் கடுமையான ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகம் தொடங்கியபோது எண்ணெய் விலைகள் ஒப்பீட்டளவில் நிலையான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

