கோலாலம்பூர்:
மலேசியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் நிதி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கூகுள் தனது விளம்பரக் கொள்கையில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. ஏப்ரல் 14 முதல், நிதிச் சேவை தொடர்பான விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் தகுந்த உரிமம் பெற்றிருப்பதை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனி மலேசியாவில் நிதிச் சேவை விளம்பரங்களைச் செய்ய விரும்பும் நிறுவனங்கள், தாங்கள் முறைப்படி பதிவு பெற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
அதோடு அவை மத்திய வங்கி (Bank Negara Malaysia), செக்யூரிட்டி கமிஷன் மலேசியா (Securities Commission Malaysia) அல்லது லாபுவான் நிதிச் சேவை ஆணையத்திடம் (Labuan Financial Services Authority) உரிமம் பெற்றிருப்பது அவசியம் என்றும் கூறப்படுகிறது.
ஏப்ரல் 14-க்குள் இந்தச் சரிபார்ப்புச் சடங்குகளைப் பூர்த்தி செய்யாத நிறுவனங்களின் விளம்பரங்கள், கூகுள் தளங்களில் இனி காட்டப்படாது. இதற்கான விண்ணப்பப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் ஆன்லைன் மோசடிகள் கடந்த காலங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு மட்டும் மலேசியர்கள் சுமார் 2.77 பில்லியன் ரிங்கிட் பணத்தை ஆன்லைன் மோசடிகளில் இழந்துள்ளனர். இந்த இழப்புகளைத் தடுக்கும் முயற்சியாகவே கூகுளின் இந்த புதிய ‘நிதிச் சேவை சரிபார்ப்பு’ (Financial Services Verification) கொள்கை அமல்படுத்தப்படுகிறது.
கூகுள் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் பென் கிங் கூறுகையில், “மோசடி செய்பவர்கள் தொடர்ந்து புதிய முறைகளைக் கையாண்டு வருகிறார்கள். அவர்களைத் தடுக்க வலுவான பாதுகாப்பு அவசியம். அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மட்டுமே இனி கூகுளில் பயனர்களைச் சென்றடைவதை உறுதி செய்வோம்,” என்று தெரிவித்தார்.
இதேபோல், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) நிர்வாக இயக்குனர் அப்துல் கரீம் பக்கீர் அலி, கூகுளின் இந்த முன்னெடுப்பை வரவேற்றுள்ளார். “மலேசியர்களை ஆன்லைன் மோசடிகளில் இருந்து காப்பதற்கான மிக முக்கியமான படி இது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய விதிமுறைகள், டிஜிட்டல் தளங்களில் நிதிச் சேவைகளைப் பயன்படுத்தும் மலேசியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




