Last Updated:
மேற்கு வங்க தேர்தலுக்கு முன் மீதமுள்ள 53 லட்சம் வாக்காளர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க தேர்தலுக்கு முன் மீதமுள்ள 53 லட்சம் வாக்காளர்களை சேர்ப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு 10 லட்சம் நோட்டீஸ் மீது முடிவு எடுத்தவுடன் துணை பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க தேர்தல் வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 63 லட்சம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதில் இது வரை 7 லட்சம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி அமர்வு, இதுவரை 10 லட்சம் நோட்டீஸ் மீது முடிவு எடுக்கப்பட்டதாக இன்று காலை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்தது. மீதமுள்ள நோட்டீஸ் மீது தேர்தலுக்கு முன் முடிவு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி அளித்தது.
மேலும், ஒவ்வொரு 10 லட்சம் மனுக்கள் மீது முடிவு எடுத்ததும், துணை இறுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரச்னைகளுக்கு தீர்வு காண கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூடுதல் அமர்வுகளை அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி மேற்குவங்க அரசும், தேர்தல் ஆணையமும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருவதால், எஸ்.ஐ.ஆர். பணிகள் பாதியிலேயே நிற்கிறது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிபதிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகளை பயன்படுத்தி எஸ்.ஐ.ஆர். பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தது.


