நிதர்ஷன் வினோத்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களைக் கடத்தி வந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சந்தேக நபர்களை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அவர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்களிடமிருந்து 630 போதை மாத்திரைகள், 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


