Last Updated:
பயணிகள் சவுதி செக்போஸ்ட்டிற்குப் பகல் நேரத்திலேயே செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான மோதலால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பஹ்ரைனில் வசிக்கும் மற்றும் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக முக்கிய அறிவிப்பினை தூதரகம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியர்கள் அனைவரும் இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது நிலவும் சூழலிலும் இந்தியத் தூதரகம் வழக்கம் போலத் தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால உதவியைப் பெற இந்தியத் தூதரகத்தின் 24 மணிநேர ஹெல்ப்லைன் எண்களான +973 39418071 மற்றும் +973 38400433 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
பஹ்ரைனில் இருந்து சவுதி அரேபியா வழியாக இந்தியா செல்ல விரும்பும் இந்தியக் குடிமக்களுக்காகச் சில சிறப்பு வழிமுறைகள் மற்றும் SOP வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சுற்றுலா விசா அல்லது குறுகிய கால விசாவில் வந்து அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவர்களுக்கான ‘டிரான்சிட் விசா’ அனுமதியை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் சவுதி அரசிடம் இருந்து பெற்று வருகிறது. எனவே, சவுதி வழியாகப் பயணம் செய்ய விரும்புவோர் தங்களது கோரிக்கைகளை பகுரைன் தூதரகத்தின் மூலம் ரியாத் தூதரகத்திற்கு அனுப்ப வேண்டும்.
சவுதி அரேபியா வழியாகப் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக இந்தியா செல்வதற்கான உறுதிப்படுத்தப்பட்ட விமான டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும். மேலும், சவுதி குடிவரவு அதிகாரிகளிடம் ரியாத் இந்தியத் தூதரகம் வழங்கிய முறையான கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
டிரான்சிட் விசா தொடர்பான உதவிகள் தேவைப்படுவோர் wel2.bahrain@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்கள் கோரிக்கைகளை அனுப்பலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத் தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு.. அவசர கால உதவி எண்கள் வெளியீடு!


