Last Updated:
எதிர்க்கட்சிகள் ஈரான் போர் விவாதம் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஈரான் போர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு கடந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (9ஆம் தேதி) தொடங்கியது.
மக்களவை காலை கூடியதும் அஜித் பவார் உட்பட ஐந்து உறுப்பினர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் போர் குறித்து விளக்கமளித்தார். அப்போது வளைகுடா நாடுகளில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையில் பதாகை ஏந்தியபடி மையப் பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பினர்.
இதனால், அவை நடவடிக்கை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடியதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக காலையில் நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்!” – எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு


