Last Updated:
ஆந்திராவில் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இந்திய அரசு மக்கள் தொகை கட்டுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்தபோது, தென் மாநிலங்கள் அதனை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, மக்கள் தொகையை கட்டுப்படுத்திவந்தன.
குறிப்பாக நாம் இருவர், நமக்கு இருவர் எனத் தொடங்கி தற்போது நாம் இருவர், நமக்கு ஒருவர் என இருந்துவருகிறது. வளர்ந்துவரும் இளம் தலைமுறையினர் மக்கள் தொகைக் கட்டுப்படுத்தும் முயற்சியையும் தாண்டி, குழந்தை இல்லாத தம்பதி எனும் இலக்கை நோக்கி நகர்ந்துவருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க குழந்தை பெற்றெடுக்கும் விவகாரத்திலும், மக்கள் தொகை விவகாரத்திலும் பெரும் சவால் இருந்துவருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையை மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அப்போது, மக்கள் தொகை குறைவாக இருக்கும் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மிகவும் குறைக்கப்படும் எனும் அச்சத்தையும், அதனை கருத்தில்கொண்டு மறுவரையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சரி செய்ய, புதிய மக்கள் தொகை மேலாண்மை கொள்கை என்ற வரைவுத் திட்டத்தை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.
அதன்படி, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும், 18 வயது வரை அந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு 5 வயது வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


