மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் நடவடிக்கைகளால், கடல் வழி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பாரசீக வளைகுடா பகுதியில் சுமார் 23,000 இந்திய மாலுமிகள் சிக்கித் தவிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய வழித்தடமான “ஹார்முஸ் ஜலசந்தி’யை ஈரான் தற்போது முடக்கியுள்ளது.

மார்ச் 5-ம் தேதி நிலவரப்படி, இந்தியக் கொடி ஏந்திய 36 கப்பல்கள் இந்தப் பகுதியில் சிக்கியுள்ளன. இதில் 7 கப்பல்கள் அரசுக்குச் சொந்தமான இந்தியக் கப்பல் கழகத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் உள்ள இந்தியக் கப்பல்களைக் கண்காணிக்கும் கால இடைவெளியை, ஒவ்வொரு 6 மணி நேரத்திலிருந்து தற்போது ஒவ்வொரு ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது.
சிக்கியுள்ள கப்பல் ஊழியர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

