
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்களுடன் 89 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் தொடக்கத்தில் பில் சால்ட் 5 ரன்கள், ஹாரி புரூக் 7 ரன்கள் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் 25 ரன்கள் எடுத்து விரைவில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடி அணியை முன்னோக்கி கொண்டு சென்றார். அவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இறுதி வரை போராடிய அவர் 105 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் இந்திய அணி மொத்தமாக 19 சிக்சர்கள் அடித்தது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து அணி மற்றும் நடப்பு உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி தலா 19 சிக்சர்கள் அடித்திருந்தன.

