கோலாலம்பூர் | மார்ச் 05, 2026:
சுங்கை பீசி – உலு கிள்ளான் விரைவுச்சாலையில் (SUKE) இன்று காலை நிகழ்ந்த விபத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு டிரெய்லர் மோதிக்கொண்டதில் 33 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை சுமார் 9:30 மணியளவில் தேசா துன் ரசாக் (Desa Tun Razak) பகுதியிலிருந்து ஸ்ரீ பெட்டாலிங் நோக்கிச் செல்லும் பாதையின் 1.2-வது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது என்று, கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் புலனாய்வுத் துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமட் ஜம்சுரி முகமட் ஈசா கூறினார்.
யமஹா MT-15 மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 33 வயது இளைஞர், இடதுபுறப் பாதையில் சென்றுகொண்டிருந்த ஹோண்டா டேஷ் 125 மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதினார்.
மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த யமஹா ஓட்டுநர், சாலையின் நடுப்பகுதியில் விழுந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வந்து கொண்டிருந்த டிரெய்லரின் ஓட்டுநரால் திடீரென வாகனத்தை நிறுத்த முடியாமல் போனதால், அந்த இளைஞர் மீது டிரெய்லர் ஏறி இறங்கியது.
தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (31 வயது) மற்றும் டிரெய்லர் ஓட்டுநர் (41 வயது) ஆகிய இருவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




