Last Updated:
தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சிகளில் ஒன்றாக இருப்பது காங்கிரஸ். இந்நிலையில், ராகுல் காந்தியே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என ரேவந்த் வைத்த கோரிக்கையை ராகுல் ஏற்றுள்ளார்.
அடுத்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என ரேவந்த் ரெட்டி கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு ராகுல் காந்தி இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொண்டதே இந்தியா கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனால், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலினை இந்தியா கூட்டணியின் வழிகாட்டியாகவும், தேசிய அளவில் தலைமை ஏற்கத் தகுதியானவராகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பார்க்கின்றன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த திரிணாமுல் காங்கிரஸ் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சுழற்சி முறையில் தலைமைப் பதவியை வழங்கலாம் என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளன.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, பிரதமர் வேட்பாளராக தாங்கள்தான் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை வைத்ததாகவும், இதற்கு ராகுல் காந்தி நேர்மறையாக பதிலளித்ததாகவும் காங்கிரஸ் எம்.பி. மல்லு ரவி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வைத்த கோரிக்கை. உடனே ஏற்று சம்மதம் தெரிவித்த ராகுல் காந்தி! தெலங்கானாவில் முடிவுக்கு வந்த விவகாரம்


