Last Updated:
பீகாரின் நெடுநாள் முதலமைச்சரான நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் 202 தொகுதிகளை வென்று என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.
மேலவை உறுப்பினரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகாரின் நெடுநாள் முதலமைச்சருமான நிதிஷ் குமார் மீண்டும் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், பாஜகவின் சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட நாடு முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து வரும் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், பீகார் மாநிலத்தின் முதலமைச்சரான நிதிஷ் குமார் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
75 வயதான முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநிலங்களவைக்கு மாறும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார். அப்படி அவர் ராஜினாமா செய்த பின் மாநிலத்தின் முதலமைச்சராக துணை முதலமைச்சர்களாக இருக்கும் பாஜகவின் சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் ஆகியோரில் ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், இதுவரை அரசியலில் ஈடுபடாமல் இருந்துவந்த நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், தற்போது தீவிர அரசியலில் இறங்க இருக்கிறார் என அம்மாநில அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான ஷ்ரவன் குமார், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநிலங்களவைக்கு செல்வதும், அவரது மகன் நிஷாந்த் குமாரின் அரசியல் வருகையும் கவனம் பெற்றுள்ளது. அதேசமயம், நிதிஷ் குமார் ராஜினாமா செய்தபிறகு யார் முதலமைச்சர் எனும் கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர்களில் ஒருவர் அந்தப் பதவியை ஏற்பார்களா அல்லது நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் அந்தப் பதவிக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர்களில் ஒருவர் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்கள் என்றால், பீகார் அரசியல் வரலாற்றில் முதல் பாஜக முதலமைச்சர் எனும் பெயர் வரும் என்றும் சொல்லப்படுகிறது.


