Last Updated:
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும் எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதல் இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமின்றி பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் தொடர்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நேற்று அதிகாலை முதல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இஸ்ரேல் இதற்கு ‘ஆபரேஷன் ஜெனிசிஸ்’ என்றும், அமெரிக்கா இதற்கு ‘ஆபரேஷன் எபிக் ப்யூரி’ என்றும் பெயரிட்டுள்ளன. ஈரானின் அணுசக்தி மையங்கள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டு அறைகளைக் குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் டோமாஹாக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் முதல் கட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதல் இஸ்ரேல் மட்டுமின்றி, அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள அண்டை நாடுகள் மீதும் நடத்தப்பட்டன. குறிப்பாக, பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு தலைமையகத்தின் மீது ஏவுகணை தாக்குதலும் பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதலும் நடத்தப்பட்டது.
அபுதாபி மற்றும் துபாய் பகுதிகள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த பகுதிகளில் உள்ள அமெரிக்க விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டன. 137 ஏவுகணைகள் மற்றும் 209 ட்ரோன்களை அமீரக பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அபுதாபியில் ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். துபாயில் ‘புர்ஜ் அல் அரப்’ ஹோட்டல் அருகே சிறிய தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ‘அல் உதித்’ விமானத் தளம் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தினன. ஜோர்டானின் வான்வெளியில் 49 ஏவுகணைகளை வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துபாய், அபுதாபி, தோஹா உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களும் இப்பகுதிக்கான சேவையை நிறுத்தியுள்ளன.
ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர்: பஹ்ரைன், கத்தார், குவைத் நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்பட காரணம் என்ன?

