
பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுவதாகவும், கப்பல் கட்டணம் மற்றும் தூரம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பிரதான ஆதாரமாக இல்லை என்றும் அவர் விளக்கினார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா உறுதியாக தெரிவித்துள்ளார்.
போர் பதற்றம் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்று எரிபொருள் வாங்கும் நிலை காணப்படுகின்ற போதிலும், விநியோகத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் எனவே, மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவுகள் முழுமையாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும், எந்தவித இடையூறும் இன்றி ஒரு மாதத்திற்கும் மேலாக விநியோகத்தைத் தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் 37 நாட்களுக்கு போதுமான பெற்றோலும், 35 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் 47 நாட்களுக்கு போதுமான விமான எரிபொருளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலதிகமாக எந்தக் கப்பலும் வராத நிலையிலும் கூட, குறிப்பிட்ட காலத்திற்கு தடையின்றி எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என அவர் கூறினார்.
மேலும், இலங்கை இறக்குமதி செய்யும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுவதாகவும், கப்பல் கட்டணம் மற்றும் தூரம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பிரதான ஆதாரமாக இல்லை என்றும் அவர் விளக்கினார். மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டுமே சில தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இருப்பினும் அதற்கும் தேவையான கையிருப்பு ஒரு மாதத்திற்கு போதுமானதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தை மக்கள் முற்றிலும் தவிர்த்து, தேவையற்ற பதற்றத்தில் எரிபொருளை சேமிக்க முயல வேண்டாம் என கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

