Last Updated:
அரியனை கைப்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம்; மதுராந்தகம், மதுரை, திருப்பரங்குன்றம் நிகழ்வுகள், பிரதமர் மோடி, பியூஷ் கோயல், திருமாவளவன், கனிமொழி கருத்துகள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரியனையை கைப்பற்ற அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மும்முரமாக பணியாற்றி வருகிறது. இக்கூட்டணியின் முதல் பரப்புரைக் கூட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ஒருமாத இடைவெளியில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வந்திருப்பது கவனம் பெற்றுள்ளது. கடந்த முறை பொதுக்கூட்டத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு சென்ற பிரதமர், இம்முறை கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் முடிந்து, என்.டி.ஏ. தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நாளை திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி, முருகனை தரிசனம் செய்கிறார். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட மதுரை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக சாடி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றார். மறுபுறம், திருப்பரங்குன்றம் ஒருபோதும் அயோத்தியாக மாறாது என்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
இதனிடையே, என்.டி.ஏ. பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரியார் புகைப்படம் அகற்றப்பட்டது சர்ச்சையான நிலையில், பெரியாரை மறுக்கக் கூடியவர்கள் தமிழ்நாட்டிலும் மறுக்கப்படுவார்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.


