கேரளம் மாநிலம் கொல்லம் நல்லிலாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பரவூரைச் சேர்ந்த சஃப்னா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விடிய விடிய சேட்டிங் செய்து நட்பாகப் பழகியவர்களுக்குள், நெருக்கம் அதிகரிக்க நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.
சம்பவத்தன்று கடற்கரையோரம் டீ குடிக்க செல்லலாமா? எனக் கேட்ட நபரை, பனம்பிள்ளி நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார் சஃப்னா. அங்கு சென்றபோது அறையில் மறைந்திருந்த 4 ஆண்கள் அந்த நபரைச் சுற்றிவளைத்துத் தாக்கி காயப்படுத்தினர்.
ஆடைகளைக் கலைந்து நிர்வாணப்படுத்தியவர்கள், சஃப்னாவுடன் வலுக்கட்டாயமாக நெருக்கமாக இருக்கச் சொல்லி, வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்துள்ளனர். அதை எதிர்த்துப் போராடிய நபரை முகத்திலும், முதுகிலும் குத்தி சரமாரியாகக் காயப்படுத்தினர். ஒரு கட்டத்தில் அப்பாவி நபரிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள், பாதிக்கப்பட்டவரின் செல்போனைப் பறித்து ஜிபே மூலம் பணம் பறிக்க முயன்றனர். ஆனால், அக்கவுண்டில் பணம் இல்லாததால், அக்கும்பல் ஏமாற்றம் அடைந்தது.
பின்னர், ஆக்ரோஷத்தில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரம் போராடி, உயிரைக் காப்பாற்றிக் கொண்ட நபர், கடவந்த்ரா காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை சட்டையைக் கழற்றி காட்டி கண்ணீர் விட்டுள்ளார். உடனே விசாரணையில் இறங்கிய போலீசார், சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஹனி ட்ராப் வலையில் சிக்கவைத்து அப்பாவி நபரை அடித்து சித்ரவதை செய்த ஜான், அமல், ஆனந்த் மற்றும் சஃப்னா ஆகிய 4 பேரை கூண்டோடு தூக்கினர். மேலும், ஐந்தாவது குற்றவாளியான கொச்சியைச் சேர்ந்த சஞ்சுவைத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர் செவித்திறன் மற்றும் பேச்சுக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி என்பதும், திட்டமிட்டு ஹனி ட்ராப் வலையில் சிக்கி, சித்ரவதைக்கு உள்ளானதும் உறுதியானது.
பல கட்ட விசாரணைக்குப் பின்னர் கைதான 4 பேர் மீதும், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கும்போது, அஞ்சாமல் சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்துள்ளனர். தெளிவாக போட்டோ எடுங்க! எனக்கூறி போலீசாரையே அதிரவைத்துள்ளனர்.

