புத்ராஜெயா | பிப்ரவரி 28, 2026
சிலாங்கூர், குண்டாங் தாசிக் பிரு (Tasik Biru) ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது, அதில் சிக்கியிருந்த ஒரு தாயையும் அவரது இரண்டு குழந்தைகளையும் துணிச்சலாக மீட்ட ஏழு இளைஞர்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
நேற்று (பிப்ரவரி 27) புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான நோன்பு திறக்கும் நிகழ்வில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது:
பிரதமர் சுமார் 15 நிமிடங்கள் அந்த இளைஞர்களுடன் செலவிட்டு, அவர்கள் உயிரைப் பணையம் வைத்து நடத்திய மீட்புப் போராட்டத்தை நேரில் கேட்டு அறிந்தார்.
அவர்களின் உடனடித் துணிச்சலானது சமூகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், உயர்ந்த மனிதாபிமான மதிப்பீடுகளை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, குண்டாங் தாசிக் பிரு ஏரிப்பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்தது. காரினுள் தாயும் இரு குழந்தைகளும் சிக்கித் தவித்தபோது, அங்கிருந்த இந்த ஏழு இளைஞர்களும் உடனடியாக ஏரியில் குதித்து அவர்களைப் பத்திரமாக மீட்டனர். இவர்களின் இந்த வீரச் செயலைப் பாராட்டி பிரதமர் அவர்களுக்குச் சிறப்பு வெகுமதிகளையும் வழங்கினார்.




