Last Updated:
நியூஸ்18 ரைசிங் பாரத் 2026 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் போராட்டம் கண்டனத்துக்குரியது எனவும், மக்கள் வெறுப்பில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
“ஏ.ஐ. உச்சி மாநாட்டில் சட்டையின்றி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது கண்டனத்துக்குரியது. காங்கிரஸின் சித்தாந்த வறட்சியை இது காட்டுகிறது. நாட்டை அவமதித்த காங்கிரஸ் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். போராட்டத்தை நியாயப்படுத்த மகாத்மாவின் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்” என நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026-ல் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026 “உள்ளுக்குள் வலிமை” என்ற கருப்பொருளைக் கொண்டு நடந்துவருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று உரையாற்றினார்.
அவர், தனது உரையில் வேகமாக மாறிவரும் உலகளாவிய ஒழுங்கில் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கான திட்டம், பொருளாதார உந்துதல் மற்றும் மூலோபாய முன்னுரிமைகள் குறித்து பேசியிருக்கிறார்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “நியூஸ்18 ‘ரைசிங் பாரத் 2026’ மாநாடு நமது வலிமையை பறைசாற்றுகிறது. இந்தியாவின் சக்தியை இந்த உச்சி மாநாடு பிரதிபலிக்கிறது. நமக்குள் இருக்கும் வலிமையை நாம் கண்டறிவது அவசியம். கடந்த 11 ஆண்டுகளில் நமது சக்தியை நாம் உணர்ந்துவருகிறோம்.
இந்தியாவின் வலிமை தொடர்பாக இந்த மாநாடு விவாதிக்கவுள்ளது. நம் நம்பிக்கையால் பல வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுவருகிறோம். நமது வர்த்தக ஒப்பந்தங்கள் பலருக்கு வியப்பூட்டுவதாக உள்ளன. நம்முடைய தன்னம்பிக்கை காரணமாக பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்வதற்கு முன்வந்துள்ளன.
உலகின் வளர்ச்சி எஞ்சினாக இந்தியா உருவெடுத்துள்ளது. இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளோம். உற்பத்தித் துறையை வலுப்படுத்தி இந்தியாவை வளர்ச்சி எஞ்சினாக மாற்றியுள்ளோம்.
ஒரு காலத்தில் ஏ.டி.எம்.கள் கூட இல்லாத நாடாக இந்தியா இருந்தது. இன்று இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பைப் பார்த்து உலகம் வியக்கிறது. உலகின் 3வது மிகப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பு நம்மிடம் உள்ளது. வந்தே பாரத், நமோ பாரத் போன்ற அதிவேக ரயில் சேவைகளும் சாத்தியமாகியுள்ளன. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 3 கோடி குடும்பங்கள் இருளில் மூழ்கி இருந்தன.
ஏ.ஐ. உச்சி மாநாட்டில் சட்டையின்றி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது கண்டனத்துக்குரியது. காங்கிரஸின் சித்தாந்த வறட்சியை இது காட்டுகிறது. நாட்டை அவமதித்த காங்கிரஸ் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். போராட்டத்தை நியாயப்படுத்த மகாத்மாவின் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்” இவ்வாறு பேசினார்.
Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “ஏ.ஐ. உச்சி மாநாடு காங்கிரஸ் போராட்டம்; மக்கள் வெறுப்பில் உள்ளனர்” – பிரதமர் மோடி


