டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும் ஒருங்கிணைந்த ரீதியிலும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16 ஆவது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் தனித்தனியாகச் செயல்படாமல், ஒரு கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் விரைவான பலனைப் பெற முடியும் எனச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கும், ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காகப் பொருத்தமான காணிகளை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் முறையான பரிசோதனை மற்றும் பரிந்துரைகளுக்கு அமையவே புதிய வீடமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் கொடுப்பனவுகளைத் தாமதமின்றி வழங்கவும், இதுவரை கொடுப்பனவு கிடைக்காதவர்களின் மேன்முறையீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
வீட்டுத் திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருடன் விசேட கலந்துரையாடலை நடத்தவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (a)


