Last Updated:
பிரேக்-அப் ஆன நிலையில் பெண் யூடியூபர் தனது தாயாருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
தெலங்கானாவில் பெண் யூடியூபர் ஒருவர், தனது தாயாருக்கு “ஐ லவ் யூ சோ மச்” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவு எடுத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரேக்-அப் மன உளைச்சலில் தனது உயிரை மாய்த்துக் கொண்டதன் பின்னணி என்ன?
மூன்று ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த காதலன், தன்னை விட்டு விலகிச் சென்ற விரக்தியில் கடைசியாக அவரது முகத்தை பார்க்க வரவழைத்த நிலையில், காதலன் வந்து சென்ற அடுத்த சில நிமிடங்களில் இளம்பெண் இந்த உலகை விட்டே சென்றுள்ளார். சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் மர்மம் விலகுமா?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் போனு கோமலி. 21 வயதான இவர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். இதற்காக வாடகை வீடு எடுத்து தனியாக தங்கியிருந்தார். படித்துக் கொண்டே பார்ட் டைம் ஜாப் ஆக யூடியூப்பில் வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட வீடியோக்களையும் பதிவிடுவதில் பிஸியாக இருந்துள்ளார்.
போனு கோமலியின் தாயார் சத்ய வரலட்சுமி குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தனது தாயாருக்கு “ஐ லவ் யூ சோ மச்” என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், தனது சகோதரனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் போனு கோமலின் தாயார், அவருக்கு கால் செய்துள்ளார். ஆனால், கோமலின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. தொடர்ந்து போன் செய்தபோதும் எந்தவொரு ரெஸ்பான்சும் இல்லாமல் இருந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த தாயார் ஐதராபாத்தில் உள்ள தனது மகளின் தோழிகளுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து, கோமலி தங்கியுள்ள வீட்டிற்கு தோழிகள் சென்றுள்ளனர். உள்பக்கமாக பூட்டியிருந்த கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. உடனே, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அங்கு, தூக்கில் தொங்கியவாறு போனு கோமலி சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் போனு கோமலி 27 வயதான அகில் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்தது தெரியவந்தது. சாஃப்ட்வேர் இன்ஜினியரான அந்த இளைஞரும், யூடியூபராக உலா வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகிய நிலையில் அண்மையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காதலர்கள் இடையே முரண்பாடு அதிகரித்ததால் பிரேக்-அப் செய்துள்ளனர். தொடர்ந்து இருவரும் தங்களது பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர். அகில் அதை கடந்து சென்ற நிலையில், போனு கோமலி முழுமையாக மீள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த நிலையில் தனது முன்னாள் காதலனை நேரில் வந்து சந்திக்கும்படி போனு கோமலி அழைத்துள்ளார். அவரும் இளம்பெண் தங்கியுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, உன்னுடன் மனம் விட்டு பேச வேண்டும் என்று போனு கோமலி கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த அகில், வீட்டிற்குள் செல்லாமலேயே திரும்பியுள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் தனது தாயாருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட இளைஞரையும் விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் கோமலியின் செல்போன் பதிவுகள், வீடியோக்கள் மூலமும், நண்பர்கள், அக்கம் பக்கத்தினரிடமும் தகவலை திரட்டி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால்தான் இளம்பெண் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேக்-அப் ஆன நிலையில் பெண் யூடியூபர் தனது தாயாருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
“ஐ லவ் யூ சோ மச்” – அம்மாவுக்கு மெசேஜ்… பிரேக்-அப்… கடும் மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த யூடியூபர்…


