Last Updated:
இலங்கை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே கைது, ISIS, தேசிய தவ்ஹீத் ஜமாஅத், ராஜபக்சே குடும்பம், அனுர குமார திஸாநாயக்க முக்கியமாக உள்ளனர்.
இலங்கை ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் உளவுத் துறை தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில், 45 வெளிநாட்டவர் உள்பட 276 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ISIS அமைப்பு, உள்ளூர் பயங்கரவாத குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மூலம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. பயங்கரவாத தாக்குதல் அபாயம் இருப்பதாக இந்தியாவின் RAW, பலமுறை எச்சரித்தும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.
தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக, இலங்கை உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டியது மற்றும் அதற்கு உதவியது ஆகிய குற்றச்சாட்டுகள் சல்லே மீது சுமத்தப்பட்டுள்ளன. சுரேஷ் சல்லே, இலங்கை ராணுவத்தின் மிக முக்கியமான மற்றும் அதே சமயம் சர்ச்சைக்குரிய உளவுத்துறை அதிகாரியாகக் கருதப்படுபவர். ராஜபக்ச குடும்பத்தினரின் நிழல் போலச் செயல்பட்டவர் என்பதே இவர் மீதான பொதுவான பிம்பம்.
மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது சுரேஷ் சல்லே ராணுவ உளவுத்துறையில் மிக வேகமாக உயரத்தை எட்டியவர். ராஜபக்சே குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தேவைகளை நிறைவேற்றுவதில் மிக முக்கியமானவராக இருந்தார். கோத்தபய ராஜபக்சே பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, அவருக்கு மிக நெருக்கமான அதிகாரிகளில் ஒருவராக சல்லே திகழ்ந்தார். 2015-ல் ராஜபக்சேக்கள் ஆட்சியை இழந்தபோது, சுரேஷ் சல்லே ஓரங்கட்டப்பட்டார்.
2019 ல் ராஜபக்சேக்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், நாட்டில் ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாக வேண்டும் எனத் திட்டமிட்டு, அதற்காக பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அசாத் மௌலானா என்பவரின் வாக்குமூலத்தின்படி, 2018ல் ராஜபக்சேக்களின் அறிவுறுத்தலின்பேரில் சுரேஷ் சல்லே பயங்கரவாதிகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
2019 குண்டுவெடிப்புக்குப் பிறகு நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபரானார். அவர் பதவிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியங்களில் ஒன்று, அப்போது இந்தியாவில் பயிற்சியில் இருந்த சுரேஷ் சல்லேவை உடனடியாக வரவழைத்து, இலங்கையின் மிக உயரிய உளவு அமைப்பின் தலைவராக நியமித்தது. பொதுவாக ஒரு காவல்துறை இயக்குநர் வகிக்க வேண்டிய இந்தப் பதவிக்கு, ஒரு ராணுவ அதிகாரியான சல்லேவை கோத்தபய நியமித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
ராஜபக்சேக்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளைக் கண்காணிப்பதிலும், அவர்களை ஒடுக்குவதிலும் சுரேஷ் சல்லே ஒரு முக்கியக் கருவியாகச் செயல்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. 2024-ல் ராஜபக்சக்களின் அரசியல் செல்வாக்கு சரிந்து, அனுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்த பிறகு, சல்லே உளவுத்துறை பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ராணுவ அதிகாரியாக இருந்த ஒருவர், சொந்த நாட்டு மக்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக வெளியாகும் தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


