தலவாக்கலை நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில், போலி மோதிரத்தை வைத்துவிட்டு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க மோதிரத்தை நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.
இனம் தெரியாத நபர் ஒருவர், நகை வாங்குவது போல் குறித்த கடைக்குள் நுழைந்துள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்த குறித்த நபர், கடையின் உரிமையாளரின் கவனத்தைத் திசைதிருப்பி தன்னிடம் இருந்த போலி மோதிரம் ஒன்றை காட்சிப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, அங்கிருந்த தங்க மோதிரத்தை மிகவும் லாவகமாகத் திருடி மறைத்துக் கொண்டுள்ளார்.
சிறிது நேரம் நகைகளைப் பார்வையிட்ட குறித்த நபர், “வேறொரு நாளில் வந்து நகைகளைக் கொள்வனவு செய்கிறேன்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அவர் சென்ற பின்னர் உரிமையாளர் நகைகளை எண்ணிப் பார்த்தபோது, ஒரு மோதிரம் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பரிசோதித்தபோது, அந்த நபர் போலி மோதிரத்தை வைத்துவிட்டு தங்க நகையை திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்த தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எஸ். சதீஸ்



