Last Updated:
இந்தச் சட்டம் நிறைவேறினால், ஆண்ட்ரூ மற்றும் அவரது சந்ததியினருக்கு அரச உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என கூறப்படுகிறது.
பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசு வரிசையில் இருந்து முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவை நீக்குவது குறித்து அரச குடும்பமும், அரசாங்கமும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
உலகின் பல்வேறு நாடுகளை உலுக்கி வருகிறது பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனின் ஆவணங்கள். இந்த ஆவணத்தில் பிரதான இடத்தை பிடித்திருப்பவர் பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ. இதன் எதிரொலியாக, ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டமும், ராணுவ கவுரங்களும் கடந்த ஆண்டு பறிக்கப்பட்டன. ஆண்ட்ரூ, பிரிட்டனின் வர்த்தக தூதராக இருந்த போது எப்ஸ்டீனிடம் அரசின் ரகசிய ஆவணங்களை வழங்கிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த 19- ஆம் தேதி கைது செய்யப்பட்டு 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த வெர்ஜினியா கியூஃப்ரே என்ற பெண், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டின் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் வாரிசு வரிசையில் இருந்து ஆண்ட்ரூவை நீக்குவது குறித்து பிரிட்டன் அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரிட்டன் மன்னராகும் வாரிசு வரிசையில் முதல் இடத்தில் மன்னர் சார்லஸின் மூத்த மகனான இளவரசர் வில்லியம் உள்ளார். இரண்டாவது இடத்தில் வில்லியமின் மூத்த மகன் இளவரசர் ஜார்ஜூம், மூன்றாவது இடத்தில் இளவரசி சார்லட்-டும், நான்காவது இடத்தில் இளவரசர் லூயிசும் இருக்கின்றனர். 5-வது இடத்தில் மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி உள்ளார். இதற்கு அடுத்தப்படியாக ஹாரியின் மகனும், மகளும் உள்ளனர். இந்த வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளவர் தான் ஆண்ட்ரூ.
மன்னருக்கு ஏதாவது நேர்ந்தால், ஆண்ட்ரூ அரசராகும் வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக அது சாத்தியப்படும். இதைத் தடுக்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மன்னரும், அரசும் விரும்பினாலும் கூட ஆண்ட்ரூவை வாரிசு வரிசையில் இருந்து நீக்குவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு மன்னரும் ஒப்புதல் தர வேண்டும்.

பிரிட்டனைத் தவிர கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 காமன்வெல்த் நாடுகளும் இந்த சட்ட மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். வாரிசு வரிசையில் இருந்து நீக்கப்படுவது, ஆண்ட்ரூவை ஒரு தனி குடிமகனாக கருதப்படுவதை உறுதிப்படுத்தும். அரசு அவருக்கு வழங்கும் பாதுகாப்பு முழுமையாக நிறுத்தப்படும். வாரிசு வரிசையில் இருந்து நீக்கப்பட்டாலும், அவரது தனிப்பட்ட சொத்துக்கள் பாதிக்கப்படாது. ஆனால், அரச குடும்பத்திற்குச் சொந்தமான வீடுகளில் அவர் தங்குவதற்கான உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இதற்கு முன் 1936-ல் எட்டாம் எட்வர்ட் மன்னர், அமெரிக்கப் பெண்ணான வாலிஸ் சிம்சனைத் திருமணம் செய்வதற்காகத் தனது பதவியைத் துறந்தபோது “His Majesty’s Declaration of Abdication Act 1936” என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆண்ட்ரூ மீதான விசாரணை முடிந்ததும், “The Royal Succession Amendment Bill” என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேறினால், ஆண்ட்ரூ மற்றும் அவரது சந்ததியினருக்கு அரச உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என கூறப்படுகிறது.
பிரிட்டன் அரச குடும்ப வாரிசு வரிசையிலிருந்து நீக்கப்படுகிறாரா முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ?


