Last Updated:
குஜராத் அரசு காதல் திருமண பதிவிற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என சட்டத்திருத்தம் அறிவித்தது; ஹர்ஷ் சங்கவி முன்வைத்த மாற்றத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு, காங்கிரஸ் மவுனம்.
குஜராத்தில் காதல் திருமணங்களால் நடக்கும் மோசடிகளை தடுக்க, திருமண பதிவிற்கு இனி பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என சட்டம் இயற்ற உள்ளதாக அம்மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. குஜராத் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பேசிய பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி, திருமண பதிவு முறையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக கூறினார்.
குஜராத்தில் அப்பாவி பெண்களை ஏமாற்றி சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பது கரையான்கள் போன்று பரவி வருவதாக ஹர்ஷ் சங்கவி குறிப்பிட்டார். மேலும் காதல் திருமணம் செய்து மத மாற்றம் நடப்பது கலாசார ஊடுருவலாக மாறி உள்ளது என்று கூறிய அம்மாநில துணை முதலமைச்சர், இதனை தடுக்கும் பொருட்டு திருமண பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.
அதன்படி, திருமண பதிவிற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்படும் என்றும், திருமண பதிவிற்கு விண்ணப்பித்தால் வாட்ஸ் ஆப் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பொது வெளியில் அறிவித்து 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கவும் அவகாசம் வழங்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.


